Saturday, February 7, 2009

ஆமை புகுந்த வீடு உருப்படாது....


இன்றைய நிலவரம்:
இந்த பழமொழியைச் சொல்லியே உலகில் அதிக நாள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆமையை ராசி இல்லாத மிருகத்தின் அடையாளமாகச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம்.
நமது முன்னேற்றத்தை அது தடுப்பதாக பழி சுமத்திக் கொண்டிருக்கிறோம்.

முன்னோர் சொன்னது:
கல்லாமை,உண்மை பேசாமை,பெரியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை போன்ற ஆமைகள் புகுந்தால் அந்த வீடு முன்னேறுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.எனவே, இந்த இல்லாமைகள் அகற்றி வாழ்க்கையில் இன்புற வேண்டும்

ஒரு சிறிய ஆய்வு:
ஆமையின் அதிகப்பட்ச வேகம் நிமிடத்திற்கு 14 அடி தூரமாகும்.இந்த வேகத்தில் வரும் ஆமை வீட்டின் சுற்றுச் சுவரின் முகப்புவாயிலின் வழியே முற்றம் கடந்து,திண்ணை தாண்டி, படியில் ஏறி, வாசலுக்குள் நுழைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை யூகித்துகொள்ளுங்கள். அவ்வளவு நேரம் ஒரு வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமலும்,வீட்டில் உள்ளவர்கள் சோம்பலோடும்,வாசல் கதவு திறந்தும் கிடந்தால் அந்தவீடு சிறக்க எந்த வகையிலாவது வாய்ப்பு உண்டா என்பதையும் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

நீதி:
விலங்குகளின் மேல் பழி போடாமல்
நம்மைத் திருத்திக் கொண்டாலே நன்மை பிறக்கும்

Sunday, February 1, 2009

பிள்ளையார் சுழி...?!



பிள்ளையார் சுழி :
சுப காரியங்களைப் பற்றி எழுத ஆரம்பிப்பதற்கு முன்னால்,கடிதம் எழுதுவதற்கு முன்னால், தற்சமயம் தேர்வு எழுதுவதற்கு முன்னாலும் கூட பிள்ளயார் சுழி போட்டபின் ( 'உ' ம் அதன் கீழ் '=' இரண்டு அடிக்கோடுகளும் ) தான் ஆரம்பிக்கிறோம் இது கிட்டத்தட்ட சட்டமாகவே ஆகும் சூழலில் தான் தற்போது உள்ளது


நிலவரம் :

பிள்ளையார் :
கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கும், எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிள்ளையார் வழிபாடு தமிழ் நாட்டுக்குள் ( குறிப்பாக வாதாபியில் இருந்து )வந்தததாக தமிழக வரலாறு பற்றிய குறிப்புகளில் பதிவாகி உள்ளது
கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் பிள்ளையார் பற்றிய சான்றுகள் எதுவும் தமிழ் இலக்கியங்களிலும் ,பதிவுகளிலும்,ஆராய்சிகளிலும் காணப்படவில்லை

பிள்ளையார் சுழி : கி.பி இரண்டாம் நூற்றாண்டு ஓலைச் சுவடிகளின் ஓரத்தில் பிள்ளையார் சுழியை ஒத்த எழுத்துக்கள் ( '0' ம் அதனைத் தொடர்ந்தோ அல்லது அடியிலோ '-' )காணப்படுகின்றன .இது அந்தக் காலத்தில் எழுதப் பயன்படும்ஒலையின் தரத்தை எழுதுவதற்கு தகுதியான ஈரப்பதத்தில் இருக்கிறதா என பரிசோதனை செய்து பார்ப்பதற்காக, எழுத்தாணியின் கூர்மையை சோதிப்பதற்காக, படைப்புகளை பதிய ஆரம்பிப்பதற்கு முன்னால் சோதனைக்காக இடப்பட்ட குறிகள் எனவும், நாளடைவில் '0' வும் '-' வும் சேர்ந்து '' வாவக மாறியிருக்கலாம் எனவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது

உணரப்படும் உண்மை :
தமிழகத்தில் பிள்ளையாரின் காலத்திற்கு ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே புழக்கத்தில் வந்துவிட்ட குறியீட்டுக்கு எப்படி பிள்ளயார் சுழி என்ற பெயர் வந்தது? .எனில், அந்தப் பெயர் கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே வந்திருக்க வேண்டும், அப்படியெனில்,அதற்கு முன்னால் அதன் பெயர் என்னவாக இருந்தது ?

உணர வேண்டிய உண்மை :
இன்று பளபளப்பான காகிதமும்,பளிங்குபோல வழுக்கிச் சென்று எழுதும் பந்து முனை எழுதுகோல்களும் (பால் பாய்ண்ட் பேனா )தான் உபயோகத்தில் உள்ளன. இதன் தரம் சோதித்து அறிய வேண்டிய தேவை எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை

உணர்த்தும் நீதி :
செம்மறியாட்டு மந்தையில் முன் செல்லும் ஆடு குதித்துத் தாண்டிச் செல்லும் இடத்தை,அங்கே எந்தவித தேவையும் இடர்பாடும் இல்லாவிட்டாலும் மற்றவைகளும் குதிதுத் தாண்டியேச் செல்கின்றன............